3. கிரகணத் தொழுகை தொழும் முறை



கிரகணத் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டது.
ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு நிலைகள், இரண்டு கிராஅத்துக்கள் இரண்டு ருக்கூஃகள், இரண்டு சுஜூதுகள்.
ஆயிஷா رضي الله عنها அறிவித்தார்:
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி ﷺ அவர்கள் தொழுதார்கள். நின்று தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்.
பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி, ‘ஸமிஅல்லாஹு லிமன்ஹமிதா” என்றார்கள். எழுந்து முன்போன்றே நின்றார்கள்.
பின்னர் நீண்ட நேரம் ஓதினார்கள்.
இது முன்பு ஓதியதை விடக்குறைவானதாக இருந்தது.
பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முந்தைய ருகூவை விடக் குறைவானதாக இருந்தது.
பிறகு நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். அடுத்த ரக்அத்களிலும் இது போன்றே செய்தார்கள்.
சூரிய கிரகணம் விலகியபோது ஸலாம் கொடுத்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்” என்று கூறினார்கள்.”
📚(புஹாரி: 1047), (முஸ்லிம்: 901)
*இந்த அடிப்படையில் கிரகணத் தொழுகையின் அமைப்பை சுருக்கமாக இப்படிக் கூறலாம்*
1. முதல் தக்பீர் கூறி ஆரம்ப துஆவை ஓதுதல், அஊது பிஸ்மி ஓதுதல், பின்னர் சூறதுல் பாத்திஹாவை ஓதி, நீண்ட ஒரு சூறாவை ஓதுதல்.
2. நீண்ட நேரம் ருகூஃ செய்தல்.
3. ருகூஃவிலிருந்து எழுந்து நிலைக்கு வருதல்.
4. சுஜூது செய்யாமல் சூறதுல் பாதிஹா வையும் முன்னர் ஓதியதை விட சற்று குறைவாக வேறு ஒரு சூறாவையோ குர்ஆனின் சில பகுதியையோ ஓதுதல்.
5. மீண்டும் ருகூஃ செய்தல். அந்த ருகூஃவில் நீண்ட நேரம் இருத்தல். ஆனால், முன்னைய ருகூஃவை விட சற்று நேரம் குறைந்ததாக இரண்டாம் ருகூஃவை அமைத்துக் கொள்ளல்.
6. மீண்டும் ருகூஃவிலிருந்து எழுதல்.
7. பின்னர் நீண்ட நேரம் சுஜூது செய்தல். நடு இருப்புக்கு வந்து மீண்டும் சுஜூது செய்தல்.
8. பின்னர் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்து இதே போன்று அந்த ரக்அத்திலும் செய்தல்


Comments